‘பாலிவுட் வாய்ப்புக்காக இப்படி பேசலாமா?’ - சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா

தென்னிந்திய சினிமாக்களில் மசாலா, ஐட்டம் பாடல்கள்தான் உள்ளன என்றும், பாலிவுட்டில் தான் மெலடியான ரொமாண்டிக் பாடல்கள் உள்ளன எனவும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத் திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான இவர், பின்னர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ தெலுங்குத் திரைப்படம், இவரை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய்யின் ‘வாரிசு’ படத்திலும், இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவின் ‘மிஷன் மஜ்னு’ படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இதில் ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரவுள்ள நிலையில், ‘மிஷன் மஜ்னு’ திரைப்படம் ஜனவரி 20-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போர் பற்றிய படமாக வெளிவரவுள்ள ‘மிஷன் மஜ்னு’ படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் ராஷ்மிகா மந்தனா பேசியவைதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விழாவில் பேசிய ராஷ்மிகா மந்தனா, “பாலிவுட்டில்தான் அதிகமான காதல் (ரொமாண்டிக்) பாடல்கள் வெளிவருகின்றன. நான் வளரும்போது பாலிவுட் காதல் பாடல்களை கேட்டுத்தான் வளர்ந்தேன். ஆனால் தென்னிந்திய சினிமாவில் மசாலா பாடல்கள், குத்துப் பாடல்கள் மற்றும் கவர்ச்சிப் பாடல்களே அதிகம் இடம்பெறுகின்றன. (அவர் பேசும்போது இடையில் தொகுப்பாளர் எங்களுக்குத் தெரியும், எங்களுக்கும் தெரியும் என்று பகடியாக பேசி சிரிக்கிறார். ராஷ்மிகாவும் சிரிக்கிறார்). இது என்னுடைய முதல் பாலிவுட் காதல் பாடல். இது மிகவும் நன்றாக வந்திருப்பதால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

தற்போது இதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கன்னடத்திலிருந்து தெலுங்கு திரையுலகம் வரும்போதும், இதேமாதிரி ராஷ்மிகா மந்தனா வாய்ப்புக்காக பேசியதாகவும், தற்போது பாலிவுட் வாய்ப்புக்காக தென்னிந்தியா சினிமாவை அவமானப்படுத்துவதாகவும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ‘கீதா கோவிந்தம்’ படத்தில் காதல் பாடல்கள் மூலம் தான் நீங்கள் பிரபலமடைந்தீர்கள் என்றும், பாலிவுட் படங்களில் குத்துப் பாடல்களே இல்லையா என்றும், வாய்ப்புக்காக எப்படி வேண்டுமானாலும் பேசும் சாமர்த்தியம் நிறைந்தவர் எனவும் ராஷ்மிகா மந்தனாவை தென்னிந்திய ரசிகர்கள் சாடி வருகின்றனர். ஏற்கனவே கன்னட சினிமாவை பற்றி ராஷ்மிகா மந்தனா கூறியது விமர்சனங்களை சந்தித்த நிலையில், ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதை வாடிக்கையாக ராஷ்மிகா மந்தனா வைத்திருப்பதாக நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்